http://i50.tinypic.com/29mlkww.jpg

நான் கிரிக்கெட் வீரன், பயங்கரவாதி அல்ல- பர்வேஸ் ரசூல்

10/31/09



கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்த பிறகு விடுவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல், "நான் ஒரு கிரிக்கெட் வீரன் என்பதை நிரூபிக்க வந்துள்ளேன், பயங்கரவாதியல்ல" என்று கூறியுள்ளார்.
சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டது.
கடந்த 17 அக்டோபர் 2009 அன்று, இந்த அணியினர் தங்கியிருந்த அறையில் புகுந்த கர்நாடகா காவல்துறை, ஜம்மு காஷ்மீர் அணியினரின் பைகளைச் சோதனை செய்தது. இதில், இருவரின் பைகளிலிருந்து சந்தேகத்திற்கு இடமான சப்தம் வந்தது எனக் கூறி, அவர்களைக் கைது செய்தது. இதற்கு பல தரப்புகளிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தவறான தகவல்களின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து விட்டதாக கூறி கர்நாடகா காவல்துறை இருவரையும் விடுவித்தது.
இதில் ஒருவரான பர்வேஸ் ரசூல்,ஜம்மு காஷ்மீர் அணிக்காக 3ஆம் நிலையில் களமிறங்கி 49 பந்துகளில் 50 ரன்களை அடித்து, தன் மீது சுமத்தப்பட்ட சந்தேகக்கணைக்குப் பெங்களூர் ஸ்டேடியத்திலேயே பதிலளித்தார். அவர் 50 ரன்களை எடுத்தபோது பர்வேஸ் ரசூலை பாராட்ட பெவிலியனில் அணி முழுதும் திரண்டு எழுந்து நின்று கரகோஷம் செய்தது. பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசிய போது, "நான் ஒரு கிரிக்கெட் வீரன் என்பதை நிரூபிக்க விரும்பினேன்; பயங்கரவாதியல்ல, நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கிறோம்" என்றார்."அன்று இரவு என்னால் தூங்கமுடியவில்லை, என்ன நடந்தது என்பது பற்றி நான் ஆச்சரியமடைந்தேன். இதனால் இங்கு கிரிக்கெட் விளையாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் எனது பெற்றோர்கள் என்னை கிரிக்கெட் ஆட்டத்தில் கவனம் செலுத்துமாறு கூறினர்" என்று தான் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வேளையில் தன் நிலைமையினைக் குறித்து கூறினார்.
இதே போன்ற எண்ணம் ஜம்மு காஷ்மீர் அணிப் பயிற்சியாளர் அப்துல் கயூமிற்கும் ஏற்பட்டது. "நானும் கிரிக்கெட் அணியை முதலில் இங்கிருந்து அழைத்துச் சென்று விடவேண்டும் என்றுதான் நினைத்தேன். அப்போது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இந்த விஷயத்தை தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியதால் இங்கு தங்க முடிவு செய்தோம்.நாங்கள் காஷ்மீரி என்பதாலும், நாங்கள் சந்தித்து வரும் கடின காலங்களாலும், எங்கு சென்றாலும் எங்களை சந்தேகிக்கின்றனர். அடுத்ததாக மும்பை சென்று அங்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்கிறோம்; அங்கும் இதனால் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுவோம" என்று வருத்ததுடன் கூறியுள்ளார்
கயூம் பெங்களூர் காவல்துறையின் இந்த கைதை கண்டித்து போட்டியின் போது காஷ்மீர் வீரர்களை எதிர்ப்பின் அடையாளமாக கறுப்புத் துணியைக் கையில் கட்டிக் கொண்டு ஆடுமாறு பயிற்சியாளர் கயூம் அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
"காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது என்று நாம் தொடர்ந்து கூக்குரலிட்டு வருகிறோம் .ஆனால் காஷ்மீரிகளை இந்தியர்களாக, குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம்களை இந்தியர்களாக நாம் மதிக்கவில்லை என்பதையே இது போன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன" என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்."
மாநிலத்தின் அணியில் பங்குகொண்ட ஒரு வீரருக்கே இந்தியாவில் இது போன்ற கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்றால் காஷ்மீரில் வாழும் சாதாரண முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை" என விமர்சகர்கள் கர்நாடகா அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
source:inneram

0 comments

Post a Comment